கோவை வந்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷான் ராவ், ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் பயனாளிகளுக்கு தாமதமின்றி முறையாக சென்றடைகிறதா..? என்பது குறித்து கேட்டறிந்தார்.
கோவை: மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷான் ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளார். அதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்கள், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள், தொழில் தொடங்க வழங்கப்படும் நிதி உதவிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி திட்டங்கள் சென்றடைகிறதா..? மற்றும் வங்கிகளின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் சிறு தொழில் புரிவோர்களுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனை நடுத்தர மக்களுக்கு வழங்குவதற்கு வங்கிகள் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் கோவைக்கு வருகை தந்து வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள கடன்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வருவாய் அலுவலர் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.