திருப்பூரில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதன் பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
பின்னர், நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், கலந்து கொண்ட மாணவ-மாணவியர்கள் திருப்பூர் மாநகரைத் தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.