கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 உள்ளிட்ட 4 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அம்மன் நகரில் அமைந்துள்ள வியாசர் ஆன்மீக மையத்தில், நான்கு வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்த சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 உள்ளிட்ட 4 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு, தற்போது குறைக்கப்பட்டு விட்டதாகவும், முன்பு வழங்கப்பட்டு வந்த அதே அளவு குடிநீரே தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வார்டு வாழ் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
52 லட்சத்துக்கு பதில் 36 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகம்...!
அப்போது கூட்டத்தில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு பேசுகையில், கோவை மாநகராட்சி 5, 9, 22 உள்ளிட்ட மூன்று வார்டுகளுக்கும் சேர்த்து 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது ஆனால், தற்பொழுது 36 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் போதுமான அழுத்தத்தில் வழங்கப்படாத காரணத்தால் குடிநீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்வது சிரமமாக உள்ளது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும், என்றார்.
விரைவில் தீர்வு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கூட்டத்தில் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜான்சன், உதவிப் பொறியாளர் ராதா, குடியிருப்போர் நலச் சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.