கோவையில் 20-வது பதிப்பாக நடைபெறவுள்ள மாபெரும் அக்ரி இன்டெக்ஸ் 2022-வேளாண் கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் வரும் 15-ந்தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
கோவை: கோவையில் 20-வது பதிப்பாக நடைபெறவுள்ள மாபெரும் அக்ரி இன்டெக்ஸ் 2022-வேளாண் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இந்தியாவின் முதன்மையான வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ் 2022 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 15-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
இதில் கண்காட்சியின் தலைவர் கிருஷ்ணராஜ், கொடிசியா தலைவர் திருஞானம், மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்.
20-வது பதிப்பாக நடைபெறும் விவசாய கண்காட்சி, 15-ந்தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாகவும், ஒருங்கிணைந்த துல்லிய வேளாண்மை மற்றும் நுண் நீர் பாசனம் மூலம் இந்திய வேளாண்மையில் மாற்றங்களை உருவாக்குதல் எனும் தலைப்பில் நடைபெற உள்ள கண்காட்சியில், இத்தாலி, இஸ்ரேல், ஜெர்மனி, ஜப்பான், ஸ்வீடன், பிரான்ஸ், ஆகிய நாடுகளில் இருந்தும், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் என சுமார் 497-அரங்குகள் இடம் பெறுகின்றன.
கண்காட்சி துவக்க விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இக்கண்காட்சியில், சூரிய ஒளி பம்புகள், நுண் நீர்ப்பாசனம், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், மண்ணில்லா விவசாய முறைகள், மதிப்பு கூட்டுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு தானியங்கி முறைகள், கூட்டுப் மதிப்புக் பொருட்கள், அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம், வேளாண் சந்தை, உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்பங்களுக்கு கவனம் அளிக்கப்பட உள்ளது.
மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடைப் பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருட்கள் இடம்பெற உள்ளதாகவும், நாடு முழுவதிலும் இருந்து வேளாண் நிபுணர்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில் துறையினர், இடுபொருள், விதை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தனர்.