கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், சிலிண்டர்களை பரிசோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு, முன்னர் சிலிண்டர் விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், இந்த இறப்புக்கு முறையான நீதி வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிஐடியு அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர், பிபிசிஎல் தொழிற்சங்க தலைவருமான கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
கடந்த 28-ம் தேதி பாரத் கேஸ் உபயோகித்து வருகின்ற மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமதி, என்பவரது வீட்டில் கேஸ் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமதி, லலிதாம்பிகை, திலீப்குமார், தினேஷ் என நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.
இவர்கள் நான்கு பேரும் உயிரிழந்து விட்டதற்கு பி.பி.சி.எல் நிறுவனம் தான் முழுக்க முழுக்க காரணம் எனவும் காலாவதி ஆகிப்போன கேஸ் சிலிண்டரில் கேஸ் நிரப்பி அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தான் இந்த விபத்துக்கு காரணம் எனவும், இந்த நிலையில் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
சிலிண்டர்களை பரிசோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும், குடும்பத்தில் மீதமுள்ள கர்ப்பிணிப் பெண்ணான சரண்யாவிற்கு பாரத் கேஸ் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வேலையை வழங்குமாறும் தெரிவித்த நிலையில் இக்கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அதுவரை அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கில் உள்ள தினேஷ் மற்றும் திலீப்பின் உடல்களை வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.