உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த மாணவிகளை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி அருகே உள்ள சமுதாய கூடத்தின் சுற்றுப்புற கம்பிவேலி விழுந்ததில், கம்பி வேலியில் உள்ள கல் மேலே சாய்ந்ததில் நான்காம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளுக்கு காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் அடுத்த விஜயாபுரம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆனது செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 600-மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
போதிய அளவிற்கு வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ மாணவிகளை பள்ளியின் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமர்த்தி வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சமுதாய கூடத்தில் இருந்து இன்று காலை நான்காம் வகுப்பு மாணவ - மாணவிகளை ஆசிரியர்கள் தொடக்க பள்ளிக்கு அழைத்து வந்தனர். அப்பொழுது வரிசையாக மாணவ - மாணவிகள் நடந்து வந்தபோது சமுதாய கூடத்தின் சுற்றுப்புற முன் பகுதியில் உள்ள கம்பி வெளியின், கம்பியில் ஒரு மாணவியின் உடை சிக்கியது.
அது தெரியாமல் அந்த மாணவி வேகமாக நடக்க முற்பட்ட போது கம்பி வேலியின் கல்லானது கீழே சாய்ந்தது.
இதில் 4-ம் வகுப்பு பயிலும் ஜெபராணி(9) மகிழ்ந்தி(9) கவிமலர்(9) ஆகிய மூன்று மாணவர்களுக்கு காலில் லேசான அளவு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த மாணவிகளை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.