மேற்கூரை இடிந்து விழுந்த சமயத்தில் எந்த குழந்தைகளும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இருந்த போதும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை தனியார் பள்ளி உள்விளையாட்டு அரங்க மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் உயிர் தப்பினர்.
கோவை குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் நூர்சேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்குத் தேவையான பெரிய இரும்பு பில்லர்கள், இரும்பு கம்பிகளை கொண்டு கூரை அமைக்கும் பணியானது ஜேசிபி எந்திரம் மூலம் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் திடீரென மேற்கூரை பெரும் சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது.
இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கம் போல பள்ளி செயல்பட்டு வந்தது. ஏராளமான குழந்தைகள் வழக்கம் போல பள்ளிக்கு வந்திருந்தனர்.
மேற்கூரை இடிந்து விழுந்த சமயத்தில் எந்த குழந்தைகளும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இருந்த போதும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.