தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர், இராமகிருஷ்ணன் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.
கோவை: கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் முடிக்கப்படாமல் இருக்கும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
அரசு வழங்கும் முதலீடுகள் எந்த நோக்கத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதோ, அத்திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா..? என ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு துறைக்கும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலீடுகளுக்கான கணக்குகளையும், தணிக்கை கணக்குகளையும், சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.
இக்குழுவின், தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், இக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அப்துல் வஹாப், பொன்னுசாமி உள்ளிட்டோர், கோவை மாவட்டத்தில் முடிக்கப்படாமல் இருக்கும் அரசு திட்டங்கள் மற்றும் மனுக்கள் குறித்து விளக்கம் கேட்டனர்.
கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வருவாய் அலுவலர், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்குழுவின், கீழ் கிட்டத்தட்ட 64 பொதுத்துறை நிறுவனங்கள், 2 வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.