வளா்ச்சித்திட்டப்பணிகள், சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் தலைமையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக் கூட்டரங்கில் மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப்பணிகள், சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக் கூட்டரங்கில் மத்திய மண்டலத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித்திட்டப்பணிகள், சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் இன்று (04.07.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, “கோவை மாநகராட்சியில் ஜூலை 1 முதல் சொத்துவரி வசூல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள தொழில்வரி தற்போது 4 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. வரும் வாரம் முதல் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு நாள் மேயா் தலைமையில் நடைபெறும்.
கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள டவுன்ஹால், நஞ்சுண்டாபுரம், புலியகுளம், இராமநாதபுரம், வ.உ.சி.பூங்கா உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைவாகச் செய்துமுடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் ஜனவரி 2023-க்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிச்சி பகுதியில் மக்கள் தொகை அதிக அளவு உள்ளதால் குடிநீர் விநியோகம் செய்யும் அளவு அதிகரிக்கப்படும்.
மேலும், எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு சிறப்புத்திட்டம் ஏதேனும் செயல்படுத்த இயலுமா என ஆய்வு செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் தண்ணீரின் அளவை அதிகரித்து வழங்கிட பூஸ்டர் பம்பு பொருத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் தடையின்றி வாரம் ஒருமுறை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து மாதம் தோறும் மாதிரி குடிநீர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்படும். மேலும், கழிவு நீ்ர்குடிநீருடன் கலப்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிடவும், பாதாளச் சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை உடனடியாக தூர்வாரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார்கள், குழாய்கள், மரம் அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திடப் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி பகுதியில் தேங்கும் குப்பைகளை அள்ளி வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்குக் கொண்டு செல்ல ஏதுவாக 21 டிப்பா் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 31 வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரமைப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலந்து நாட்டில் நடைபெற்ற நகரமைப்பு பணிகள் மற்றும் மாநகராட்சியின் கட்டுமானங்கள், புதிய கண்டுபிடிப்புகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி, நகரமைப்பு திட்டமிடுதல், கிரீன் சிட்டி குறித்தும் விவாதிக்கப்பட்டது. கோயம்புத்தூர், கொச்சின், புவனேஸ்வர் மாநகராட்சி சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றோம். அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்தி இனி வரும் காலங்களில் கட்டங்கள் கட்டப்படும். மேலும், நாட்டில் 75 சிறந்த நகரங்களில் 4 வது சிறந்த நகரமாக கோயம்புத்தூர் உள்ளது. வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், திவான் பகதூர் சாலை, பந்தயச் சாலை ஆகிய பகுதிகள் சிறந்து விளங்குகின்றன.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சியில் கேஸ் குழாய் பதித்தல், செல்போன் டவர் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒருசில இடங்களில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் மாநகராட்சியில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே பணிகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதனைச் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய வீடுகள், கட்டடங்கள் கட்டுவதற்கு உரிய அனுமதி வழங்க நகரமைப்பு பிரிவு திட்ட அலுவலர்களுடன் உதவி பொறியாளார்கள் பணி மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மேற்கண்ட பணிகள் குறித்து விண்ணப்பித்த 30 நாட்களில் தகுதியுடையவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மியா வாக்கி திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி விரைவில் துரிதப்படுத்தப்படும். மாநகராட்சி பள்ளிகளில் கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குப்பைகளை அகற்றிட 205 டாட்டா ஏஸ் வாகனங்கள் வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பணிகள் குழுத்தலைவர் சாந்தி முருகன், வரிவிதிப்பு & நிதி குழு தலைவர் வி.பி.முபசீரா, பொதுச் சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், உதவி ஆணையர் சங்கர், உதவி செயற்பொறியாளாகள் இராமசாமி, புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.