கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை பதாகைகளை ஏந்தி விசில் ஊதி, கைகளை உயர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோரிக்கைகள்
அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பில், 1 சதவீத வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும், மாதாந்திர உதவித் தொகையை ரூபாய். 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.
கொக்கோகோலா (Cocacola) நிறுவனங்களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்க முகாம் எங்கே..? வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க தடுமாற்றம் ஏன்..? தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எங்கே..? ஆகிய கேள்விகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், கோரிக்கை பதாகைகளை ஏந்தி விசில் ஊதி, கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஆவணம் செய்யும் படி கேட்டுக் கொண்டனர்.