கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சாலை தடுப்பில் மோதி 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலை தடுப்பில் மோதி 40-அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாலம் திறப்பட்ட முதல் நாளே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார்.
இதையடுத்து, மேம்பாலம் முழுவதும் இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள், மற்றும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 5.30-மணியளவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் (24) என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் சுங்கம் செல்லும் பாதையில் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் மேம்பால தடுப்பின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகரன் சுமார் 40-அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், தலை மற்றும் இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்டு, சுயநினைவு இழந்தார். இதையடுத்து, அங்கிருந்த அவரை மீட்டு கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் மற்றும் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட போலீசார் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒரு வழி சாலையாக உள்ள இந்த பாதையில் சிலர் எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதாகவும், இதனாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்தார். மேலும், வேகத்தடைகள் அமைக்கவும், ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு வேகத்தடை ஒளிரும் விளக்குகளுடன் பொருத்த உள்ளதாக தெரிவித்தார்.