மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுக்கவே போலீசார் அவர்களை கைது செய்தனர். ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் முயற்சியே இந்த அக்னிபாத் திட்டம் என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
கோவை: அக்னிபாத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ரயில் முன்புஅமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை ரயில்வே போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 40-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையத்தின் பின்புற வழியாக ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை - நாகர்கோவில் ரயில் முன்பாக மாணவ-மாணவியர் மறியலில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ-மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசாரும், கோவை மாநகர காவல் துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முயன்றனர்.
ஆனால் மாணவர்கள் கைது நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கவே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவியரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனையடுத்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். ரயில் நிலைய வளாகத்தில் நடைபாதையில் முழக்கங்கள் எழுப்பிய படி வந்த மாணவர்கள் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் முயற்சியே இந்த திட்டம் எனவும், அவர்கள் குற்றம் சாட்டினர். இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் முன்பு அமர்ந்ததோடு, ரயில் நிலையத்தில் பிளாட்பார்மில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.