கோவை வந்த சத்குரு சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி வாயிலாக கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: மார்ச் 21-ம் தேகி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய ஈஷா யோகா மையத்தின் நிறுவனர், சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் மற்றும் 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
மேலும், இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இன்று (ஜூன் 21) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு சத்தியமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, கோவை வந்த சத்குரு சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி வாயிலாக கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
"உலக அளவில் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண் வளம் முற்றிலும் அழிந்து விடும் என சர்வதேச விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். அதனால் மண் அழிவைத் தடுக்க நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, சத்குரு மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி பெரும் செயலை முன்னெடுத்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள்.

கலை, கலாச்சாரம், நாகரீகம், உணவுமுறை என அனைத்திற்கும் மண் தான் அடிப்படை. மண் தான் நம் சமூகத்தின் உயிராகவும் உள்ளது. இது போன்ற பெரும் பணிகளை சத்குரு தொடர்ந்து செயல்படுத்த எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பின்னர், சத்குரு பேசுகையில், "இந்த மண் காப்போம் இயக்கத்தின் பயணத்தில் கிட்டத்தட்ட 28,000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் செய்துள்ளேன். எல்லா இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தார்கள். 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர்.
8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுவரை, 320 கோடி பேர் சமூக வலைதளங்கள் மூலம் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஒரு பேராதரவு இதுவரை எங்கும் நடந்ததில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தேவையான நீண்டகால பயன் பெறக்கூடிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கு அந்நாட்டு குடிமக்களின் ஆதரவு மிக மிக அவசியம். பொதுவாக எல்லா ஜனநாயக நாடுகளிலும் ஐந்தாண்டுகள் மட்டுமே ஒரு ஆட்சி நடைபெறுகிறது.
அதனால், அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறுகிய கால திட்டங்களை மட்டுமே நிறைவேற்ற நினைக்கின்றனர். மக்களும், அதேபோல் சின்னச் சின்ன விஷயங்களைத் தான் கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர். ஆனால், இப்போது தான் முதல் முறையாக மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கையை மக்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.

இன்று காலை பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சத்குருவை வரவேற்றனர்.


இதைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி.கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன்பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், பொதுமக்களும் அவரை வரவேற்றனர்.
அதன்பிறகு, கோவை வந்த சத்குரு, சூலூர் விமானப் படை நிகழ்ச்சியை தொடர்ந்து, மாலையில் கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு ஈஷா ஆதியோகியை வந்தடைந்தார்.
வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர், ஆதியோகி முன்பு நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.