ஆழியாறிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர்:. ஆழியாறிலிருந்துஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் தமிழக அரசின் திட்டம், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம்
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பலன் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி 4 நகராட்சிகள் 12 பேரூராட்சிகள் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாக இந்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் விளங்கி வருகிறது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்லஅரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
4 குடிநீர் திட்டங்கள்
ஏற்கனவே, ஒட்டன்சத்திரம் பகுதிக்கு காவிரி ஆற்றிலிருந்து இரண்டு திட்டங்களும், பாலாறு, பொருந்தலாறு ஆகிய அணைகளில் இருந்து 2 திட்டங்கள் என 4 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனு அளித்துள்ளனர்.
இருப்பினும்,ஆழியாறு ஆற்றில் இருந்து ஒட்டன்சத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 27 ஆம் தேதி பொள்ளாச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அரசின் நீர்வளத்துறை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.,அதில், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், "அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில், இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.இல்லாவிட்டால், திட்டமிட்டபடி 27 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்", எனதெரிவித்தனர்.