கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்கும் மாபெரும் யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கோவை: ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் என சுமார் 1200 பேர் பங்கேற்கும் மாபெரும் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சூலூர் விமானப்படை யோகா நிகழ்ச்சிக்கு பின், அவினாசி சாலைகொடிசியா வளாகத்தில் நடைபெறும் பாதுகாப்பு துறை சார்ந்த கண்காட்சியை ராஜ்நாத் சிங் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள "அக்னிபாத்" திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களும்,ரயில் மறியலும் நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வருவதால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கோவை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொடிசியா வளாகத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகா நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பாதுகாப்புச் செயலர் அஜய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அக்னிபாத் போராட்டம் காரணமாக அமைச்சரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.