பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்ற குற்றவாளியை, பிடிக்க சென்ற ஆர்.எஸ். புரம் முதல்நிலை காவலர் அஷ்ரப் திடீரென மயங்கினார். தொடர்ந்து வந்த காவலர்கள், குற்றவாளியை மடக்கிப் பிடித்தனர்.
கோவை: கோவையில் அடிதடி வழக்கில் கைது செய்ய சென்ற போது, போலீஸ் காவலரை தள்ளி விட்டு தப்பி ஓடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜீவா, நேற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே ஜீவா ஒருவரை கத்தியால் குத்தியதாக ஆர்.எஸ்.புரம் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற இரண்டாம் நிலை காவலர் அஷ்ரப் என்பவர், ஜீவாவை பிடிக்க முயன்றார்.
அப்போது தீடீரென ஜீவா, காவலரை தள்ளிவிட்டு, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து, ஜீவா தடுப்புச் சுவரை தாண்டி குதிக்கும் பொழுது தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து, அவரை பிடிக்க சென்ற காவலரும் திடீரென மயங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின் தொடர்ந்து வந்த ஆர்.எஸ் புரம் போலீசார், மயங்கி விழுந்த காவலரை தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
பின்னர், தப்பித்துச் சென்ற ஜீவாவை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மயங்கி விழுந்த காவலர் அஷ்ரப் முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர், நலமுடன் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பி சென்ற குற்றவாளியை பிடிக்க சென்ற போது, காவலர் மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.