அதிமுகவை பொறுத்தவரை அனைத்து காலகட்டங்களிலும் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றும் இடம் பொதுக்குழு தான். அதனால் நிச்சயம் பொதுக்குழு நடைபெறும், எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூரில் பேட்டி.
திருப்பூர்: திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், 35 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், கட்சியின் நலன் கருதி, இன்னும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்பதற்காக ஒற்றை தலைமை என்ற முடிவை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் எடுத்துள்ளது என்றும், 35 பொதுக்குழு உறுப்பினர்களும் 100% ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.
பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் எழுதிய கடிதம் குறித்த கேள்விக்கு, பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற அறிவிப்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதனால் பொதுக்குழு நிச்சயம் நடைபெறும், எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறினார். மேலும், அதிமுகவை பொறுத்தவரை அனைத்து முக்கிய தீர்மானங்களும் எடுப்பது பொதுக்குழு தான்.. ஈ.பி.எஸ் ஆனாலும், ஓ.பி.எஸ் ஆனாலும் பொதுக்குழு உறுப்பினர்களும் தொண்டர்களும் தான் தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்றவர், ஆர்ப்பாட்டங்களை அறிவிப்பது, சில முடிவுகளை எடுக்கும் நேரங்களில் ஒற்றை தலைமை இருந்தால் தான் சரியாக இருக்கும்.
திமுகவை எதிர்க்க, 4.5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என்றும் கூறினார்.
இறுதியாக எங்களை பொறுத்தவரை யாரையும் ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்றும், ஓ.பி.எஸ் உம் எங்களுக்கு அண்ணன் தான்.. ஆனால் தலைவர் என்ற நிலை வருகையில் சிறப்பாக செயல்பட எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கிறோம் என தெரிவித்தார்.