நேற்று இரவு அந்த பெண் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த போது, சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம், அன்னூர் மசக்கவுண்டனூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (38). இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 27 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து, சண்முகசுந்தரம் அந்த பெண்ணை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில், அந்தபெண் தனது பெற்றோரிடம் வந்து பேசும்படி கூறியுள்ளார். அதன்படி, சண்முகசுந்தரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி கோரியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், தனது மகளை இனி தொல்லை செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சண்முகசுத்தரம், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் வசிக்கும் கிராமம் முழுவதும் தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அந்த பெண் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த போது, ஆம்னி வேனில் தனது நண்பரான விஜயகுமார் என்பவருடன் வந்த சண்முகசுந்தரம் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்றார்.
சுதாரித்துக்கொண்ட அந்த பெண்,காரில் இருந்து தப்பிச் சென்று அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீசார், சண்முக சுந்தரம் மற்றும் அவரது நண்பரான விஜயகுமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.