இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி அமலாக்கத்துறையை கண்டித்தும், பாஜக அரசை கண்டித்தும், பிரதமரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி அமலாக்கத்துறையை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் பிரதமரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதில், செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை காங்கிரஸ் கட்சியினுடைய பத்திரிக்கை என்றும், நேருவின் காலத்தில் இருந்து துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அந்த பத்திரிக்கை நழிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 90-கோடி ரூபாய் கொடுத்து எங்கள் சார்ந்த வேறொரு நிறுவனமாகிய யங் இந்தியா நிறுவனம் வாங்கி நடத்தி வருவதாகவும், இது எங்களுடைய பிரச்சினை எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, சுப்பிரமணிய சுவாமி ஒரு வழக்கை தொடர்ந்து உள்ளதாகவும், அதனை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாகவும், இதற்கிடையில் அமலாக்கத் துறைக்கு என்ன வேலை? என கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை எதற்காக ராகுல் காந்தியை அழைத்து தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பிய அவர் காங்கிரஸ் கட்சியை மிரட்ட வேண்டும் என்பதற்காகவும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைப்பதாகவும் தெரிவித்தார்.
ராகுல்காந்தியின் விசாரணைக்கு அழைப்பதற்கு நியாயம் கிடையாது எனவும் தெரிவித்தார். மேலும் பாஜகவின் ஏவல் பேரிலே அமலாக்கத்துறை செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காவல்துறையினர் அத்து மீறி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாஜக கட்சி அவர்களது கருத்திற்கு உட்படாதவர்களை அடக்கி அராஜக முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். வரும் காலத்தில் பிரதமர் என்ற இடத்திற்கு வரப்போகின்றவரை மிரட்டும் செயல்தான் இது என தெரிவித்த அவர் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்த நடவடிக்கைக்கு தாங்கள் அஞ்ச மாட்டோம் என்றும் இதனை எச்சரிப்பதாகவும், இதனை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் இதற்கு பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு போராட்டங்களை நடத்தி மோடி அரசிற்கும் அமலாக்கத் துறைக்கு உச்சகட்ட எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்தார்.