தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து பதிவு ஏதேனும் செய்தால், இரவு 2 மணிக்கு கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. தமிழக அரசு, காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் நல திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராகுல் காந்தியை, அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து பதிவு ஏதேனும் செய்தால் இரவு 2 மணிக்கு கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. தமிழக அரசு, காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது.
அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிப்பதற்கு காவேரி நீர் மேலாண்மைக்கு அங்கீகாரம் கிடையாது.
2021 முதல்வர் கூட்டத்தில் TANGEDCO பி.ஜி.ஆர் க்கு தான் கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறினாரா, இல்லையா?. இப்போது இருந்து, மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் திமுக தப்பிக்கலாமே தவிர, ஆட்சி மாறும் போது முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் தான். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவது ஒரு ஸ்டேஜ் ஆக்டிங் போல் உள்ளது.
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வருக்கு சம்பந்தம் உள்ளது என முக்கிய குற்றவாளி தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசவில்லை. கேரள முதலமைச்சருக்கு தங்க கடத்தல்காரர் என அவர்களது மக்கள் பெயர் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பேசுவதற்கு முகாந்திரம் இல்லை.
சீரடிக்கு கோவையிலிருந்து தனியார் ரயில் சேவை தொடங்கியதற்கு கருத்து தெரிவித்துள்ள டி.ஆர் பாலுவிற்கு பதில் கருத்து தெரிவித்த அண்ணாமலை, அரசு ரயில்களும் சீரடிக்கு இயக்கப்படுவதாகவும், இந்த ரயிலில் செல்வது மக்களின் விருப்பம்.
இதில் தவறு என சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை என தெரிவித்தார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக என்றும் தலையிடாது, எனவும் தெரிவித்தார்.