கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் நல திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் நல திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களை கெளரவித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பல்வேறு தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக, 5 கோடியே 50 லட்சம் கழிப்பறைகள் தான் இந்தியாவில் கட்டப்பட்டு இருந்தது. ஆனால், மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன் 8 ஆண்டு கால ஆட்சியில் 11 கோடியே 23 லட்சம் பேருக்கு கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மின்சாரம் இல்லாத கிராமம் இந்தியாவிலேயே இல்லை, இதில் நாம் பெருமைப்பட வேண்டும். மேலும் 67 சதவிகிதம் எல்பிஜி தற்பொழுது 99.23 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023ல் இந்தியாவின் கடைசி மனிதனுக்குக் கூட வீடு இருக்கும், என்றார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பிரதமர் மோடியின் 8 ஆண்டுகாலம் ஆட்சியில் ஏழை மக்களுக்குக்கான நலத் திட்டங்கள் மூலம் மக்கள் முன்னேற்றி வருவதாக, தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி முன்னேறிய நாடுகளுக்கு இணையாக தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளதாகவும், கூறினார்.
தொழில்நுட்பங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், முழுமையான பலன்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதாகவும், மத்திய அரசு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஊழலை ஒழித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், உக்ரைன் ரஷ்யா போரில் சிக்கிக் கொண்ட 22 ஆயிரம் மாணவர்களை காப்பாற்ற பிரதமர் தலைமையிலான அரசு, அமெரிக்க, ரஷ்ய அரசு அதிகாரிகளிடம் பேசி மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்ததாக, தெரிவித்தார்.
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் கேரள கம்யூனிஸ்ட் செயல்பாடு குறித்து எதுவும் பேசவில்லை, என தெரிவித்தார். மேலும், கேரள அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.