பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக முயற்சியில், கோவை மாவட்ட நிர்வாகம் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுப் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னை: பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்பட்ட கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது 2022 வழங்கி முதல்வர் கௌரவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு (கோவை, கரூர், தஞ்சாவூர்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.
அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்த பெரும் முயற்சிகள் மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிறப்பாக செயலாற்றிய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரனுக்கு முதல் இடத்திற்கான தங்கப்பதக்கத்தையும் சான்றிதழையும் தமிழக முதல்வர் வழங்கினார்.
இரண்டாம் இடத்தினை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மூன்றாம் இடத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பெற்றனர்.
இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், துறை தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உட்பட
அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.