அதிக லாபம், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி சுமார் 8-கோடிக்கு மேல் வசூலித்த, திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர கோரி திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் மனு அளிக்கப்பட்டது.
கோவை: திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர கோரி திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி, மன்னார்புரத்தில் எல்பின் என்ற நிறுவனம், செயல்பட்டு வருகிறது.
இதன் உரிமையாளர்களாக ராஜா(50), ரமேஷ்(45), ஆகியோர் இருந்தனர். இவர்கள், தங்கள் நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால், அதிக வட்டி, குறைந்த காலத்தில் இரட்டிப்பு பணம் என பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தனர். ஆனால், அவர்கள் கூறிய படி, டெபாசிட் முதிர்ச்சி அடைந்தும், பணத்தை திருப்பித் தரவில்லை. இது குறித்து, பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில் எல்பின் நிர்வாகிகள் நான்கு பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர்களான ராஜாவும், ரமேஷும் தலைமறைவாகி விட்டனர். இதனால், பணத்தை டெபாசிட் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
நாங்கள் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை டெபாசிட் செய்தோம். முதிர்ச்சி அடைந்தும் பணத்தை தர மறுக்கின்றனர். நிறுவன உரிமையாளர் ராஜா தலைமறைவாகிவிட்டார். நாங்கள் கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.
திருப்பூரில் மட்டும் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். தற்போது கூட 59-க்கும் மேற்பட்டோர் தான் புகார் அளிக்க வந்துள்ளோம். எங்களது பணம் மட்டுமே 8- கோடிக்கு மேல் இருக்கும். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.