தீத்திபாளையம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை வனத்துறை ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வன ஊழியரை தாக்கிய போது, அருகிலிருந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து, கூச்சலிட்டதால் அவரை விட்டுவிட்டு யானை அங்கிருந்து சென்றது. பின்னர் அவரை மீட்ட வனத்துறையினர், காயமடைந்த வன ஊழியரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், யானையிடம் சிக்கிய வன ஊழியர் மதுக்கரை வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு வீரர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், அந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக ஓடி வருவதும், அந்த யானையைப் பொதுமக்கள் மொட்டை மாடியில் நின்றபடி அச்சத்தில் பார்த்து கூச்சலிடுவதும் பதிவாகியுள்ளது.
யாரும் எதிர்பாராத நேரத்தில், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு வீரர் நாகராஜை துதிக்கையால் தூக்கி வீசி அவரை தாக்கும் பதைபதைக்கும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் அந்த யானை ஊருக்குள் வந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கும் பேரூர் தீத்திபாளையம் பகுதி மக்கள், வனத்துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.