ஒரு லாரியில் இருந்து கண்ணாடிகளை குடோனில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றும் பணியில் நால்வரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, கண்ணாடி சரிந்து விழுந்ததில், பாபு மற்றும் அபுதாகிர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை: கோவையில் உள்ள கண்ணாடி குடோனில் ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு கண்ணாடிகளை மாற்றும் போது, கண்ணாடி விழுந்து விபத்துக்குள்ளானதில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியில் "சுவதேசி கிளாஸ் ஹவுஸ்" என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கண்ணாடி குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக, கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த மூசா என்பவரது மகன் பாபு என்ற முஸ்தபா, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அலி என்பவரின் மகன் அபுதாஹிர் மற்றும் ஷாஜகான், அபுதாஹிர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஒரு லாரியில் இருந்து வந்த கண்ணாடிகளை குடோனில் இருந்து மற்றொருவருக்கு மாற்றும் பணியில் நால்வரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, கண்ணாடி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாபு மற்றும் அபுதாகிர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஷாஜகான் மற்றும் அபு தாஹிர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த செல்வபுரம் போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, உயிரிழந்த பாபு மற்றும் அபுதாகீர் ஆகிய இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள செல்வபுரம் போலீசார் கண்ணாடி விழுந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.