வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த இரயில், கோவை வடகோவையில் துவங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம் பெங்களூர், மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட்டுகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில்களில் கிடைக்கும்.
கோவை: கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் சேவை இன்று முதல் துவங்கியது. கோவை வடகோவை நிலையத்தில் இருந்து முதல் சீரடி ரயில் பயணம் இன்று மாலை துவங்கியது.
கோவையிலிருந்து முதல் பயணத்தை துவங்கியுள்ள இந்த ரயிலுக்கு, மாலை அணிவிக்கப்பட்டு, பூக்கள் தூவி வழி அனுப்பப்பட்டது. இந்த துவக்க விழாவில், தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், இயக்குனரும் நடிகருமான சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"சவுத் ஸ்டார்" (South Star) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில், பயணச்சீட்டு முதல் அனைத்து பராமரிப்பு பணிகளையும் தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.
இந்த ரயிலில் குளிர்சாதன வசதியும் உள்ளது. சிறப்பம்சமாக ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, மருத்துவர்கள் ஆகியோரும் உள்ளனர்.
மேலும், ரயில் பயணிகளுக்கு சிறப்பு விஐபி தரிசனமும் வழங்கப்பட்டு சீரடியில் அனைத்து பக்தர்களும் தங்கும் வகையில் அறைகளும் வழங்கபடுகின்றன. மேலும், பயணிப்பவர்க்ளுக்கு உறங்குவதற்காக தேவையான தலையணை போர்வைகள் வழங்கப்படும். மேலும், ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், பக்தி பாடல்கள் ஒளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த ரயிலானது, கோவை வடகோவையில் துவங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம் பெங்களூர், மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட்டுகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டணம் 2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணம் ஆனது 4,999 ரூபாயாக உள்ளது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைகளுக்கு ரூ.5000 மற்றும் பேக்கேஜ் கட்டணமாக ரூ.7,999, இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை பெட்டிகளுக்கு ரூ.7000 மற்றும் பேக்கேஜ் கட்டணமாக ரூ.9,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கு ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணமாக ரூ.12,999 வசூலிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வேயின் தலைமை பொது அலுவலர் கு கணேசன், "பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் இந்த இரயில் சேவை இயக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கான சுற்றுப்பயணமாக செயல்பட உள்ளது. இந்த ரயில் மந்திராலயத்தில் 5 மணி நேரம் நிற்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் அனைவரும் மந்த்ராலயத்தில் வழிபடலாம்.
இந்த ரயிலை சுற்றுலா ரயிலாகத் தான் இயக்க உள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஒரு கோட்சை பதிவு செய்பவர்களுக்கு ஒரு கோடி காப்பீடு வழங்கப்படும். இந்த இரயிலில் ஏசி பெட்டிகள் உட்பட 20 பெட்டிகள் உள்ளது. தனியார் நிறுவனம் அளிக்கின்ற சேவையை இந்தியன் ரயில்வே உடன் ஒப்பிட முடியாது", எனக் கூறினார்.
மேலும், இந்த இரயில் சேவை மாதத்தில் மூன்று முறை இயக்க திட்டமிட்டு உள்ளது. தனியார் நிறுவனம் அளிக்கின்ற பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளை இந்தியன் ரயில்வேயும் தர முடியும். இதில் பணியாற்றுகின்றவர்களும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்" என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சேரன், இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி என்றார். இந்த இரயில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மக்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெட்ரோல் டீசல் விலை இதை விட உயர்வாக உள்ளது, என்று பதிலளித்தார்.