விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று முதல் செயல்பட துவங்கின. பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ - மாணவிகளை, ஆசிரியர்கள் மலர்கள், இனிப்புகள் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.
கோவை: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று முதல் செயல்பட தொடங்கின.
அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ - மாணவிகளை, ஆசிரியர்கள் மலர்கள், இனிப்புகள் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.
கோவையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 193 , தனியார் பள்ளிகள் 465, உயர்நிலைப்பள்ளிகள் 658உள்ளன. 1200 க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று, கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில், இன்று அனைத்து பள்ளிகளும் 1 முதல் 10 வகுப்பு வரை திறக்கப்பட்டன.
இன்று பள்ளிகளுக்கு வந்த மாணவ - மாணவியருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரதுவாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதைகுறித்து பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கீதா:-
இன்று முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம், உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு வாரத்திற்கு பின்பு வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.
மேலும், எஸ் எஸ் குளம், பேரூர், பொள்ளாச்சி உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் நோட்டுகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலவச பாடப்புத்தகங்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என்றார்.