பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைத்திட வேண்டும், வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
கோவை: கோவை வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் (தபெதிக) உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தனர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில், சேலம் ரயில்வே துறை சார்பில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீனிவாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கைகள்
கோவை பொள்ளாச்சி அகல ரயில் பாதையை முழுமையாக பயன்படுத்த வேண்டும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க வேண்டும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைத்திட வேண்டும், வடகோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும், வடகோவையில் உள்ள FIC குடோனை இருகூருக்கு மாற்ற வேண்டும், சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் இருகூர்- போத்தனூர் வழியாக கோவை ரயில் நிலையம் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட அனைத்து கட்சிகளுக்கு அனுமதி வழங்காத நிலையில் போராட்டம் அறிவித்திருந்தனர். இறுதியாக, மனுக்களை பெற்றுக் கொண்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.