அரசு அதிகாரிகளுக்கு எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது? என்பது உள்ளிட்ட குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் பதில் அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் வங்கி விவரம் உள்ளிட்ட பணம் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் வினீத் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத் இருந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்சியர் வினீத் பெயரில், அவரது புகைப்படத்துடன் வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது.
அதில் எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது? என்பது உள்பட குறுஞ்செய்தி தொடங்கியுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் பதில் அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் வங்கி விவரம் உள்ளிட்ட பணம் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இது குறித்து ஆட்சியர் வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அவரது பெயரில், அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் கணக்கு போலியாக தொடங்கி, மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜய கார்த்திகேயன் இருந்த போது, அவரது பெயரில் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி சிலரிடம் மர்ம ஆசாமிகள் பணம் கேட்டனர். இது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து ஆட்சியர் வினீத் கூறியதாவது:-
போலியாக வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி, பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் விசாரணையில் முதற்கட்டமாக அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பித்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் பெயரில் இருந்தோ அல்லது புகைப்படத்தை பயன்படுத்தியோ ஏதாவது எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தால் போலீசில் புகார் தெரிவிக்கலாம். என்றார்.