பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்தில் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூர் வனப்பகுதியில் இருந்து மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதிக்கு அவ்வப்போது காட்டு யானைகள் இரவு நேரத்தில் கடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு கெம்பனூர் பகுதியில் இருந்து மூன்று குட்டிகளுடன் வெளியே வந்த 3 காட்டு யானைகள், பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக தெரிகிறது.
இரவு முழுவதும் அதே தோட்டத்தில் இருந்த காட்டுயானைகள், அங்கிருந்து செல்வதற்குள் விடிந்ததால், அதே பகுதியில் உள்ள புதர் அருகே முகாமிட்டது. இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள், போலுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினர்.
இன்று காலையிலும் தொடர்ந்து 3 குட்டி யானைகளுடன் இருந்த 3 பெண் யானைகளும், சென்னனூர் தனியார் தோட்டத்தில் முகாமிட்டு அருகே உள்ள ஆற்றிற்குள் இறங்கி பின் மீண்டும் அதே புதர் பகுதிக்குள் வந்ததால், போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை வனச்சரக வன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் யானையை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலும், யானைகள் மதுக்கரை வனச் சரகத்திற்குள் செல்ல வாய்ப்புள்ளதால், இரவு யானைகள் அங்கிருந்து செல்லலாம் என வனத்துறையினர் என தெரிவித்துள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் யாரும் யானையின் அருகே செல்லாமலும், யானைகள் ஊருக்குள் வராமல் பாதுகாக்கவும், ஆங்காங்கே வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகளும் வனத்துறை ஜீப் மூலமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.