திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர், கொங்கு நகர் 4வது வீதியில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய ராஜதுரை, வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார்.
பின்னர் காலையில் வெளியே வந்து பார்த்தபோது, தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தனது பைக்கின் பூட்டை உடைத்து தள்ளிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ராஜதுரை தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் பைக்கின் பூட்டை உடைத்து, திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.