பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தபெதிகவினர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 8-ஆண்டுக்கால சாதனையைக் குறிக்கும் வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் இருட்டிலிருந்து வெளிச்சம் என்பதைக் குறிப்பிடச் சாதியை மேற்கோள்காட்டி (From the pariah to A vishwa guru) என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளை ஆதாரமாக வைத்து, அண்ணாமலை மீது எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், அவ்வமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறும் போது:-
பாஜக தலைவர் அண்ணாமலையின் பதிவின் மூலம் குறிப்பிட்ட சாதி தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து அதன் நிலை உயர்த்தப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் குறிப்பிட்ட சாதி தாழ்ந்த நிலையில் இருப்பவர் என்றும், அந்த நிலையை யாரும் செல்ல விரும்ப மாட்டார்கள் என்று பொருள்படும் வகையில் பதிவு செய்துள்ளார்.
அதே நேரத்தில் இது குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்கும் போது அந்த வார்த்தைக்கு வேறு அர்த்தம் உள்ளதாகப் பதிலளித்து வருகிறார்.
மேலும் அப்படி குறிப்பிட விரும்பினால் அவர் சார்ந்த சாதியை குறிப்பிட்டு சொல்லாமல் வேண்டுமென்றே இந்த மாதிரியான பதிவுகளை பதிவு செய்துள்ளார். அவர் மீது கண்டிப்பதாக எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.