கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார் மாயமானதாக குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை வருமான வரித்துரை துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவரது தந்தை செண்பக ராமன் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். 38 வயதான சிவக்குமாருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமார் கோவை பீளமேடு அருகேயுள்ள கவுதமபுரி நகர் பகுதியில் உள்ள மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் இருந்து சிறு சூட்கேசுடன் வெளியேறியுள்ளார். அதன்பின்னர் சிவக்குமார் வீடு திரும்பாத நிலையில், கடந்த 3 நாட்களாக அவரை காணவில்லை என பீளமேடு காவல்நிலையத்தில் அவரது சகோதரர் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை தேடும் பணியில் 5 தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினர் நடத்தி விசாரணையில் சிவக்குமார் தனது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை வீட்டிலேயே வைத்து சென்றிருப்பதும், இரவு நேரத்தில் நேர்த்தியாக உடையணிந்து அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றது, அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக வெளியேறினாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை துணை ஆணையர் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.