சென்னை போரூரையடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் எதிர்வீட்டில் குடியிருந்த தஷ்வந்த் என்ற மென்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தஷ்வந்த் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், தனது மகன் கைது செய்யப்பட்ட 90 நாட்கள் வரையில் எந்தவித குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தஷ்வந்த் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி செல்வம் மற்றும் கலையரசன் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உரிய பதில் அளிக்காததால், குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தஸ்வந்த் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், 'நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சரியான வழியில் குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர போராடுவேன். எனது உறவினர்களும், நண்பர்களும் இந்த வழக்கை விட்டு விடுமாறு கூறினர். ஆனால், இவர் போன்ற குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாடச் செய்தால், பல குழந்தைகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும்' என்றார்.