காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: பளுதூக்குதலில் மீராபாய் சானு சாதனை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். 

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

போட்டியின் சிறப்பு அம்சமாக 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தார். 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் 28 வயதான குருராஜா மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. 

இதைத்தொடர்ந்து, மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் (48 கிலோ) இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில் காமன்வெல்த் அளவில் 6 புதிய சாதனைகளை மீராபாய் சானு படைத்துள்ளார். மேலும், தற்போது நிலவரப்படி, ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Newsletter