பந்தை சேதப்படுத்திய விவகாரம் : ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க ஸ்மித், வார்னருக்கு தடை

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் சிக்கினார். இந்தத் திட்டத்திற்கு, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக்கேப்டன் வார்னர் துணை போனது தெரியவந்தது. இதனால், இவர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஸ்மித் ஒரு டெஸ்டில் விளையாடத் தடை, 100 சதவீத சம்பளம் அபராதமாக விதித்தது. பான்கிராப்டுக்கு, 75 சதவீத சம்பளம் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் தனியாக விசாரிக்கப்பட்டது. முடிவில், ஸ்மித், வார்னர் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. மேலும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர்கள் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்தி சிக்கிய பான்கிராப்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் மேல்முறையீடு செய்ய இந்த மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. இதையடுத்து, ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் தென் ஆப்ரிக்காவில் இருந்து உடனடியாக நாடு திரும்புகின்றனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஸ்மித் (ராஜஸ்தான்), வார்னர் (ஐதராபாத்) இருவரும், நடப்பு ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார். 

Newsletter