தெ. ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 6 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 6 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந்தேதி டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2-வது ஆட்டம் செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிசிஸ்க்கு பதிலாக அறிமுக வீரர் கயா சோண்டோ இடம்பிடித்தார். அதேபோல் ஆல்ரவுண்டர் பெலுக்வாயோவிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி இடம்பிடித்தார்.

போட்டி தொடங்கியதும், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 118 ரன்னில் சுருண்டது. சாஹல் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ்  3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

32 ஓவரிலேயே தென்ஆப்பிரிக்கா சுருண்டதால் உணவு இடைவேளை இல்லாமல் 10 நிமிட ஓய்வுடன் இந்தியா சேஸிங் செய்ய களம் இறங்கியது. ரோகித் சர்மா, தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியாவின் ஸ்கோர் 26 ரன்னாக இருக்கும்போது ரோகிர் சர்மா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா இலக்கை எட்டிக் கொண்டிருந்த அதேவேளையில் உணவு இடைவேளைக்கான நேரமும் நெருங்கியது. இந்தியா 15 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. நடுவர்கள் கூடுதலாக 15 நிமிடம் வழங்கினார்கள். அந்த நேரத்திற்குள் இந்தியா 4 ஓவர்கள் விளையாடி 24 ரன்கள் எடுத்திருந்தது.

இன்னும் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் நடுவர்கள் லஞ்ச் பிரேக் என்று அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விராட் கோலி ஷாக் ஆனார். தென்ஆப்பிரிக்கா வீரர்களும் லஞ்ச் பிரேக் முடிவை விரும்பவில்லை.

கிரிக்கெட் விதிமுறை என்பதால் உணவிற்காக இடைவெளி விடப்பட்டது. அதன்பின் களம் இறங்கிய இந்தியா 20.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் 51 ரன்னுடனும், விராட் கோலி 46 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி கேப்டவுனில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 5 விக்கெட் வீழ்த்திய சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Newsletter