தெ. ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வி : தொடரையும் இழந்து பரிதாபம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், 0-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.

ஜனவரி 17

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், 0-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. முதல் இன்னிங்சில் முறையே தென்னாப்ரிக்கா அணி 335 ரன்னும், இந்திய அணி 307 ரன்னும் எடுத்தன.

28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில், நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் ( 80 ரன்கள்), டீன் எல்கர் (61 ரன்கள்) ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஏனைய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், அந்த அணி 258 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்ரிக்கா நிர்ணயித்தது.

பின்னர், 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முரளிவிஜய் 9 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துத் திணறியது. 

இந்த நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் புஜாரா 17 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். பார்த்தீவ் படேல் 19 ரன்களில் வெளியேறினார். தோல்வியைத் தவிர்க்க போராடிய ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால், இந்திய அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இந்தத் தோல்வியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இழந்தது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தோல்வியின் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. கடைசியாக 2014-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பிறகு, இந்தியா 10 டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டது. இதில், ஒரு தொடர் ‘டிரா’ ஆனது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்தியாவின் தொடர் சாதனைக்கு தென் ஆப்பிரிக்கா இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Newsletter