சர்வதேச போட்டிகளில் இருந்து சச்சின் தெண்டுல்கரின் ஜெர்சி எண் 10-க்கு ஓய்வு

நவம்பர் 29

சர்வதேச போட்டிகளில் இருந்து சச்சின் தெண்டுல்கரின் ஜெர்சி எண் 10-க்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை அடுக்கும் ரசிகர்கள், அவரது ஜெர்ஸி எண்ணையும் குறிப்பிட தவறுவதில்லை. அந்தளவு சச்சினின் ஜெர்சியில் பொறிக்கப்பட்டுள்ள 10-ம் எண் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒன்று. சச்சினுக்கு ராசியான எண் என்பதால் ரசிகர்களுக்கு அது பிடித்த எண்ணானது. இந்த எண்ணால் தான் தற்போது பிசிசிஐக்கு சிக்கல் வந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்தியா - இலங்கைக்கு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 10 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து ஷர்குல் தாக்கூர் விளையாடினார். இதனை சச்சினின் ரசிகர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. சச்சின் அணிந்திருந்த அந்த எண்ணை, மற்றொரு வீரர் அணிவதை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. இதுதொடர்பாக, பிசிசிஐக்கு பல்வேறு கண்டனங்கள், வேண்டுகோள்களை சச்சின் ரசிகர்கள் வைத்தனர்.

இதன்பிறகு, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட தாக்கூர், 54-ம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக இனி 10-ம் எண் வேறு எந்த வீரருக்கு வழங்கப்படாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் 10-ம் எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும், சர்வதேச போட்டிகளில் இந்த எண் வழங்கப்படாது என பிசிசிஐ வாய்மொழியாகத் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, வீரர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Newsletter