5-வது இரட்டை சதம் விளாசினார் கோலி - பிரையன் லாராவின் சாதனை சமன்

நவம்பர் 26

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில்  இரட்டை சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து பல்வேறு உலக சாதனைகளை அரங்கேற்றி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆன அவர், அப்போது முதல் அடுத்தடுத்து பல்வேறு புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினர். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50-வது சதத்தை பதிவு செய்து, தனது கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டியிருந்தார்.

இந்த நிலையில், நாக்பூரில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரட்டை சதம் விளாசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். இது அவருக்கு 5-வது இரட்டை சதமாகும். இதன்மூலம், அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முன்னாள் வீரர் டிராவிட்டுடன், கோலி 2-வது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் வரிசையில், சச்சின் டெண்டுல்கர், சேவாக் (தலா 6 முறை),  டிராவிட், கோலி (தலா 5 முறை) முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர். சுனில் காவஸ்கர் (4), இந்திய வீரர் புஜாரா (3) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதேபோல, சர்வதேச அளவில் அதிக இரட்டை சதங்கள் அடித்த கேப்டன்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட்டின் கடவுள் எனப் போற்றப்படும் டான் பிராட்மேனின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். அவர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் லாராவுடன் (5) இணைந்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். டான் பிராட்மேன் (4), தென்னாப்ரிக்கா முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் (4), மைக்கேல் கிளார்க் (4) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, 32-வது சதத்தை எட்டிய விராட் கோலி, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter