இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரருக்கு இடம்

நவம்பர் 21

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பிடித்துள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நூலிழையில் இந்தியாவின் வெற்றி தள்ளிப்போனது. இந்நிலையில், நாக்பூரில் வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக போட்டியில் விளையாட முடியாது என தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள். இதையடுத்து, தமிழ்நாடு அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பொறுப்பு வகித்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியின் விவரம் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், எம்.விஜய், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் விஜய் சங்கர்.

Newsletter