ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்களும் அவுட்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்கள் பிரிவில் பிவி சிந்து, சாய்னா நேவால் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்த நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாய் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். இன்று (22.09.2017) நடைபெற்ற காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலக சாம்பியன்ஷிப் வீரரான விக்டர் அக்செல்சென்-ஐ எதிர்கொண்டார். இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-17, 21-17 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல மற்றொரு ஆட்டத்தில், சீனாவின் ஷி யுகியை எதிர்கொண்ட எச்.எஸ்.பிரனாயும் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.



கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - என். சிக்கி ரெட்டி ஜோடி 21-18, 9-21, 21-19 என யிகிம் ஹா - செயுங் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்த நிலையில், ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் இந்திய வீரர்கள் மீது திரும்பியது. ஆனால், இன்றைய போட்டியின் முடிவுகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter