கோவையில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி!

கோவையில் போதைப்பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சடகோபன் ரமேஷ் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.



கோவை: கோவையில் நடைபெற்ற காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. 

கோவை மாநகர காவல்துறை, குமரகுரு இன்ஸ்டியூசன் மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் இணைந்து போதைப்பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை நல்லுணர்வு கிரிக்கெட் திருவிழா (CCP CUP SEASON-2) கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. 

இதில் காவல்துறை சார்பில் 16 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 32 அணிகளும் பங்கேற்றன. இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா இன்று PSG மருத்துவக்கல்லூரி மைதானத்தில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது. 



இதில் சிறப்பு விருந்தினர்களாக கிரிக்கெட் வீரர்கள் சடகோபன் ரமேஷ் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இதில் காவல் துணை ஆணையர் வடக்கு சந்தீஷ் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். 



இந்த கிரிக்கெட் போட்டியில் காவல்துறை அணியில் முதல் பரிசை காவல் ஆணையர் அணியும், இரண்டாம் பரிசை காவல் துணை ஆணையர் வடக்கு அணியும் பெற்றன. 

பொதுமக்கள் அணியில் ABT மாருதி அணி முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், ஃபியுச்சர் ஸ்டார்ஸ் அணி, இரண்டாவது பரிசாக ரூ.15 ஆயிரம், இம்பல்ஸ் அணி மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரம், GCT அணி நான்காவது பரிசாக ரூ.3,000 பெற்றன. 



பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் காப்பவள் அணி முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம் பெற்றன. 



வெற்றியாளர்களுக்கு காவல் ஆணையர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கியும் போதைப்பொருட்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்கள். 



முன்னதாக போதைப்பொருளுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Newsletter