தண்ணீரில் 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் சாதனை!

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் ராஜ முனீஸ்வர்,  2 மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனையை Nobel World Record Achiever நிறுவனம் அங்கீகரித்துள்ளது.


கோவை: 2 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்து கோவையை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதி. இவர்களது 11 வயது மகன் ராஜமுனீஸ்வர் தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக வி.ஆர்.சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்று வந்துள்ளார்.



இந்த நிலையில் அவருக்கு நீச்சலிலும் ஆர்வம் உள்ளதை அறிந்து கொண்ட பயிற்சியாளர் திலீப்குமார், Splash Swimming Academy யுடன் இணைந்து அவருக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து, புதுவித சாதனையை படைப்பதற்கு நீரில் சிலம்பம் சுழற்றுவதற்கு பயிற்சி கொடுத்துள்ளார்.



பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்ட மாணவர் ராஜமுனீஸ்வர் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார். அதிலும் பல்வேறு விதமான நீச்சல் யுத்திகளை கையாண்டு சாதனையை புரிந்துள்ளார். இவரது சாதனையை Nobel World Record Achieverஅங்கீகரித்துள்ளது.

சாதனை புரிந்த மாணவருக்கு சிலம்ப பயிற்சியாளர் திலீப்குமார், நீச்சல் பயிற்சியாளர்கள் சிவராஜகோபாலன், அருள்பாண்டி மற்றும் அவரது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter