கோவையில் பெண் காவலர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி - சிக்சர், ஃபோர்களை விளாசிய காவலர்கள்!

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்க்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கோவையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.


கோவை: கோவையில் பெண் காவலர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பெண் காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிக்சர்கள், ஃபோர்களை அடித்து விளாசினர்.

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோவை மாநகர தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.



கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துவக்கி வைத்தார். இதில் பெண் காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான Yellow Warriors என்ற அணியும், பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters என்ற அணியும் மோதிக்கொண்டன.

Best of Three என்ற கணக்கீட்டில் இப்போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் போட்டியில் டாஸில் வென்ற Yellow Warriors அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. Yellow Warriors அணி நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. Yellow Warriors அணியை சார்ந்த ஸ்ரீலேகா, சீத்தாலட்சுமி, புவனேஷ்வரி ஆகியோர் தலா 9 ரன்கள் எடுத்தனர். Blue Fighters அணியை சார்ந்த தேவி, சுதா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.



பின்னர் ஆடிய Blue Fighters அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Blue Fighters அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்ஸர் 3 ஃபோர்கள் உட்பட 33 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸில் வென்ற Blue Fighters அணி பவுலிங்கை தேர்வு செய்தது. Yellow Warriors அணி நிர்ணியிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. Yellow Warriors அணியை சார்ந்த பொன்னுபேபி 29 பந்துகளில் 10 சிக்ஸர் 2 ஃபோர்கள் உட்பட 72 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார். Blue Fighters அணியை சார்ந்த தேவி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய Blue Fighters அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Blue Fighters அணியை சார்ந்த தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 ஃபோர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் காவல் ஆய்வாளர் தெய்வமணி தலைமையிலான Blue Fighters அணி அபார வெற்றி பெற்றது.



போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வெற்றி கோப்பையை வழங்கினார்.



மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் காவலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



மேற்படி நிகழ்ச்சியில் கோவை மாநகர வடக்கு சரக காவல் துணை ஆணையர் சந்தீஷ், தலைமையிட காவல் துணை ஆணையர் சுஹாசினி, ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் மகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter