மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி - உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

திருப்பூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.


திருப்பூர்: மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டியில் உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

திருப்பூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான இறகுப் பந்து விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போட்டிகள் திருப்பூர் பல்நோக்கு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவிகளுக்கான இரட்டையர் பிரிவில் பிரண்ட்லைன் அகாடமி பள்ளி மாணவிகள் பிரவந்திகா, பிரசிதா ஆகியோர் முதலிடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த ஸ்மிதா ஹாசினி, நிவேதா இரண்டாவது இடத்தையும், உடுமலை சீனிவாச வித்தியாலயா பள்ளி மாணவிகள் மதிவதனி, ஷர்னிதா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

பள்ளி மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில், பிரண்ட்லைன் அகாடமி பள்ளி மாணவி பிரவந்திகா முதலிடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த பிரசிதா இரண்டாவது இடத்தையும், திருப்பூர் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சங்கமித்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கிடையேயான இறகுப் பந்து போட்டியில், மாணவர்கள் ஒற்றையர் பிரிவில் உடுமலை அரசு கல்லூரி மாணவர் வருண் கார்த்திக் முதல் இடத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் மோகன் பிரசாந்த் இரண்டாவது இடத்தையும், திருப்பூர் பில்டர் பொறியியல் கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கல்லூரி மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில், உடுமலை அரசு கல்லூரி மாணவி கிருத்திகா முதலிடத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி பத்மப்பிரியா இரண்டாவது இடத்தையும், அதே கல்லூரி சேர்ந்த ஜீவ தர்ஷினி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

கல்லூரி மாணவிகளுக்கான இரட்டையர் பிரிவில் உடுமலை ஜி.வி.ஜி. கல்லூரி மாணவிகள் தர்ஷனா, ஷோபனா முதல் பரிசையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுகா, சன் சைன் சமீனா ஆகியோர் இரண்டாவது பரிசையும், திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரி மாணவிகள் சுவாதி, பிளஸ்சி ஆகியோர் மூன்றாவது பரிசையும் வென்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவில் காங்கேயம் ஜி.எஸ். கல்லூரி மாணவர்கள் ஆகாஷ், ராஜ்குமார் ஆகியோர் முதல் பரிசையும், திருப்பூர் பில்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நிஜந்தன், உதய ஹெவின் ராஜா இரண்டாவது பரிசையும், நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் காமேஸ்வரன், தினேஷ் குமார் ஆகியோர் மூன்றாவது பரிசையும் வென்றனர்.

Newsletter