கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்திற்கு 2021 - 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

கோவை: கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்திற்கு 2021 - 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின், இணை நிர்வாக இயக்குனர், ஜி. செல்வராஜ் மீண்டும் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்திற்கு 2021 - 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின், இணை நிர்வாக இயக்குனர், ஜி. செல்வராஜ் மீண்டும் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 



அதேபோல, துணை தலைவர்களாக சி. என். அசோக், சி. ஆனந்த், T. பழனிசாமி மற்றும் நவரத்ன குமார் பாப்னா ஆகியோரும் எஸ். பாலாஜி செயலாளராகவும் மற்றும் இணை செயலாளர்களாக என். ராமலிங்கம், ராமகிருஷ்ணன் மற்றும் திபாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக எஸ். பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டார். 

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் திரு. ஜி. செல்வராஜ் கூறியதாவது :- 







கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. புதியதாக பதவி ஏற்ற நிர்வாகிகள் அனைவரும் கூடைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் புதிய முகங்கள் ஆவார்கள். கோவையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் நமது கோயம்புத்தூர் மாவட்டத்தில் தான் அதிகமாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. 

1. கோவையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மாவட்ட, மாநில, தென்னிந்தியா மற்றும் தேசிய அளவில் நடைபெறும். பல போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்களை போல மேலும் பல ஆர்வமுள்ள மாணவ மாணவர்களை ஊக்கமூட்டும் விதமாக மேலும் அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க உள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கத்தால் இந்த போட்டிகள் நடைபெறவில்லை. 

2. வரும் 2022ம் ஆண்டு மே மாதம் 55-வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். 

3. கோவையில் சர்வதேச அளவில் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும். 

4. ‘ஏ’ டிவிசன் ‘பி’ டிவிசன் போட்டிகள் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்யப்படும். 

5. கோவையில் மினி, ஜுனியர், சீனியர் மாணவ, மாணவியர் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் மாவட்ட அணிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

6. மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளான பொள்ளாச்சி, அன்னூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. 

7. வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சியும், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

8. மாவட்டத்தை சுற்றி உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடைப்பந்து விளையாட்டு ஊக்குவிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுவதோடு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க உதவி செய்யப்பட உள்ளது. அங்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள் ஊக்குவிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும். 

9. வ.ஊ.சி. பூங்கா கூடைப்பந்து மைதானம் மாநகராட்சியின் உதவியோடு புனரமைக்கப்பட்டு. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உடைமாற்ற தனி இடம் மற்றும் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர்கள் இடையே சுயகட்டுப்பாடு, நேர்மையான, கட்டுப்பாடான போட்டிகள், திறமை வாய்ந்த நடுவர்கள், தரமான பயிற்சி, திறமையானவர்கள் மாவட்ட அணிகள் தேர்வு போன்றவைகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. கூடைப்பந்து கழகத்தின் நிதி ஆதாரம், இம்மாவட்டத்தின் முன்னணி தொழில் அதிபர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலமாக சரி செய்யப்பட்டு பல வித வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

10. மேற்கண்ட திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்வடிவம் பெற முன்னாள் நடுவர்கள், முன்னாள் பயிற்சியாளர்கள், கூடைப்பந்து ஆர்வலர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் உதவிகளைப் பெற்று செயல்படுத்த உள்ளோம். 

11. நமது கூடைப்பந்து கழகம் நமது கூடைப்பந்து வீரர்கள், முன்னாள் வீரர்கள், கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு சலுகை கட்டணத்தில் சிகிச்சையளிக்க முன்வரும் முன்னணி தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்ய தயாராக உள்ளது.

12. கூடைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான கட்டணத்தை கூடைப்பந்து கழகமும் உறுப்பினர் சங்கமும் ஏற்றுக்கொள்ளும்.

13. நமது கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் துணைத்தலைவர் T. பழனிசாமி அவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூடைப்பந்து விளையாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து பல விதங்களில் உதவி வருவதை அங்கீகரிக்கும் விதமாக அவரை, தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் நிர்வாகியாக நியமிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்த சந்திப்பின் போது துணை தலைவர்களான சி. என். அசோக், சி. ஆனந்த், T. பழனிசாமி மற்றும் நவரத்ன குமார் பாப்னா செயலாளர் எஸ். பாலாஜி, இணை செயலாளர்கள் என். ராமலிங்கம், ராம கிருஷ்ணன் மற்றும் திபாலா பொருளாளர் எஸ். பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter