கோவையில் 54-வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி வரும் 27-ம் தேதி தொடக்கம்

கோவை : கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் சார்பில் ஆண்களுக்கான 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை போட்டியும், பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பை போட்டியும் வரும் 27-ம் தேதி கோவையில் தொடங்குகிறது.


கோவை : கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் சார்பில் ஆண்களுக்கான 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை போட்டியும், பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பை போட்டியும் வரும் 27-ம் தேதி கோவையில் தொடங்குகிறது. 

கோவை வ.உ.சி மைதானத்தில் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ள இருக்கின்றன. அதாவது,  ஆண்கள் அணியில்  வருமான வரித்துறை அணி (சென்னை), இந்திய ரயில்வே (டெல்லி), இந்திய ராணுவ அணி (டெல்லி), பாங் ஆப் பரோடா (கர்நாடகா), இந்திய கப்பற்படை (மகாராஷ்டிரா), இந்தியன் வங்கி (சென்னை), இந்திய விமானப் படை (டெல்லி) மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. 



இதேபோல, பெண்கள் பிரிவில், தென்மேற்கு ரயில்வே (ஹுப்ளி), தென் மத்திய ரயில்வே (செகந்திராபாத்), கேரளா போலீஸ் (திருவனந்தபுரம்), அரீஸ் ஸ்டீல் (சென்னை), கிழக்கு ரயில்வே (கொல்கத்தா), கேரள மின்வாரியம் (திருவனந்தபுரம்), தெற்கு ரயில்வே (சென்னை) மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. 

ஆண்கள் பிரிவில் வெற்றி முதல் 4 அணிகளுக்கு முறையே தலா ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். பெண்கள் பிரிவில், வெற்றி முதல் 4 அணிகளுக்கு முறையே தலா ரூ. 50,000, ரூ. 25,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.



"நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொள்ள இருப்பதால், கடும் சவால் நிறைந்த தொடராக இது இருக்கும். கோவை மாவட்டத்தில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரும் இந்த தொடரில் பங்கேற்க கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் சிறந்த வீரர்களிடம் இருந்து பல்வேறு அனுபவங்களை கற்றுக் கொள்ள கோவை மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்," என்றார் கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டி. பழனிசாமி.

Newsletter