36-வது தேசிய கூடைப்பந்து போட்டி : கேரளா, ஹரியானா அணிகள் சாம்பியன்

கோவை : 36-வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் கேரளா அணியும், ஆண்கள் பிரிவில் ஹரியானா அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.

கோவை : 36-வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் கேரளா அணியும், ஆண்கள் பிரிவில் ஹரியானா அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.



இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் கேரளா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில், கேரளா அணி 80 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய தமிழ்நாடு அணி 69 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. இதேபோல, ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் கேரளா அணியை எதிர்த்து ஹரியானா அணி விளையாடியது. இதில், ஹரியானா அணி 81-74 புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.



முன்னதாக, காலை 8 மணிக்கு நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான பெண்கள் பிரிவு போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில், ராஜஸ்தான் அணி 48 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும். எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி 47 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தையும் பிடித்தது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான ஆண்கள் பிரிவு போட்டியில் ராஜஸ்தான் அணியும், கர்நாடகா அணியும் மோதின. இதில், ராஜஸ்தான் அணி 92 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்று மூன்றாவது இடத்தையும், எதிர்த்து விளையாடிய கர்நாடகா அணி 68 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தையும் பிடித்தது. 



தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் பொது செயலாளர் சந்தர் முகி சர்மா முன்னிலை வகித்தார். பொருளாளர் டாக்டர். வி. ரகோத்தமன், ஈரோடு, பாரதிய வித்யா பவன் தாளாளர், டாக்டர்.எல்.எம். ராம கிருஷ்ணன், தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்தியன், பொது செயலாளர் ஆதவ் அர்சுணா, முதுநிலை துணைத் தலைவர் செந்தில் தியாகராஜன், பொருளாளர் டி. எ. ஆந்தரபதி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தலைவரும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனருமான ஜி. செல்வராஜ் மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மற்றும் பி.எஸ்.ஜி. விளையாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர். ஆர். ருத்ரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஆண்கள் பிரிவு போட்டியில் வெற்றி பெற்ற ஹரியானா அணிக்கு முதல் பரிசாக ரூ. 1.5 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கேரளா அணிக்கு பரிசாக ரூ. 1 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற ராஜஸ்தான் அணிக்கு பரிசாக ரூ. 50,000 பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.  பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா அணிக்கு முதல் பரிசாக ரூ. 1.5 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற ராஜஸ்தான் பெண்கள் அணிக்கு பரிசாக ரூ. 50,000, பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. 



மேலும், சிறந்த விளையாட்டு வீரராக ஹரியானா அணியை சேர்ந்த ஐ. சகில் மற்றும் கேரளா அணியை சேர்ந்த வீராங்கனை ஏன் மேரி ஜக்காரியா ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிசாக தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியை சேர்ந்த சத்யாவுக்கு பிராமிசிங் பிளேயர் விருது வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter