36-வது தேசிய கூடைப்பந்து போட்டி : இன்று நடைபெறும் பெண்கள் இறுதிப்போட்டியில் தமிழக - கேரளா அணிகள் பலப்பரிட்சை

கோவை : 36வது தேசிய கூடைப்பந்து தொடரில் இன்று நடைபெறும் பெண்கள் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா அணிகள் மோதுகின்றன.

கோவை : 36வது தேசிய கூடைப்பந்து தொடரில் இன்று நடைபெறும் பெண்கள் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா அணிகள் மோதுகின்றன.

இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அரையிறுதி ஆட்டங்கள் அரங்கேறின. அதில், பெண்கள் அரையிறுதி முதல் போட்டியில் கேரளா அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில், கேரளா அணி 74-70 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில், முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி, ஆட்டத்தில் வேகத்தை அதிகப்படுத்தியது. இதன்மூலம், 57-34 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழகம், ராஜஸ்தானை தோற்கடித்தது. அதிகபட்சமாக, சத்யா 25 புள்ளிகள் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.



இதேபோல, நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில் கேரளா அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில், கேரளா அணி 65-62 என்ற புள்ளி கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது. இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா அணியும், கர்நாடகா அணியும் விளையாடின. இதில், ஹரியானா அணி 80 – 72 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.



இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான பெண்கள் பிரிவு போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு நடைபெறும் மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான ஆண்கள் பிரிவு போட்டியில் ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் கேரளா அணியும் தமிழ்நாடு அணியும் மோதுகின்றன. தொடர்ந்து, 4.30 மணிக்கு நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் கேரளா அணியும் ஹரியானா அணியும் மோதுகின்றன. 



போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 3 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும், இரண்டாம் பரிசாக ரூ. 2 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். மேலும், சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter